முன்விரோதம் காரணமாக வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 நபர்கள் கைது

151

சென்னை, காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, காசிமேடு, புதுமனைக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முருகன், 33. நேற்று (16.08.2023) இரவு தனது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனம் எரிந்து கொணடிருந்த சத்தம் கேட்டு, வெளியில் வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தின் மீது 2 நபர்கள் பெட்ரோல் ஊற்றி, எரிய விட்டது தெரியவந்தது. முருகன் சத்தம் போடவே, 2 நபர்கள் தப்பியோடிவிட்டனர். இந்நிலையில் முருகனின் இருசக்கர வாகனம் உட்பட அருகில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ தீப்பற்றி எரிந்து, சேதமடைந்தது. இது குறித்து முருகன், N-2 காசிமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட காசிமேட்டைச் சேர்ந்த கார்த்திக், 25, அஜித், 23 ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்க பயன்படுத்திய பெட்ரோல் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜித்துக்கும் முருகனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்த வந்துள்ளது. இந்நிலையில் அஜித் அவரது நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து, முருகனின் இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும், இதனால் முருகனின் இருசக்கர வாகனம் உட்பட அருகிலிருந்த இருசக்கர வாகனங்களிலும் தீ பரவி எரிந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்கு பின்னர் இன்று (17.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
*****