சென்னையில் கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 9 பேரை கைது செய்த போலீசார் 19.3 கிலோ கஞ்சா, 80 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு
இதன் தொடர்ச்சியாக, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று (19.05.2024) கோயம்பேடு, காளியம்மன் கோயில் ரோடு, பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை சோதனை செய்தபோது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் கஞ்சா வைத்திருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஞானபாண்டிஸ்வரன் (23), தீனதயாளன் (21) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு
அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று (19.05.2024) கிண்டி ரயில்வே நிலையம் அருகில் கஞ்சா வைத்திருந்த கேரளா, கசரகூட்டைச் சேர்ந்த சக்காரியா பண்டரதில் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர் நகர் போலீசார்
எம்.ஜி.ஆர் நகர் போலீசார் நேற்று (19.05.2024) எம்.ஜி.ஆர் நகர், மார்க்கெட் அருகில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (22), சந்தோஷ் (19), விக்னேஷ் (எ) வெள்ளை விக்கி (24), ராஜபாண்டி (23), அபிஷேக் (20), சதீஷ்குமார் (19) ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் 80 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது தொடர்பாக மொத்தம் 3 வழக்குகளில், 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 19.3 கிலோ கஞ்சா, 80 டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 9 நபர்களும் நேற்று (19.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.