உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றுவோம்: முதல்வர் உறுதி

153

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ., ஜி.கே.மணி அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீட்டித்தால் மே மாதம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோய்விடும். அதற்குள் 10.5% இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என கூறினார்.

இந்த தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது: -‘‘10.5% இட ஒதுக்கீடு என்பது எந்த நேரத்தில் கொண்டு வரப்பட்டது? தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நாளில் அவசரகோலத்தில் கொண்டு வரப்பட்டது. அதனால்தான் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. நீதிமன்ற தடையுத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் ஆணையத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், 10.5% இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சி கொண்டு வந்தது என்பதை பொருட்படுத்தாமல் நாங்களும் அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.