பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் செயல்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்: சென்னை நகர காவல்துறை
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் செயல்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை அறிக்கை விவரம்: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை பாதுகாப்பு செயல்முறைகளை வழங்கி -வழக்குகள் பதிவு செய்யப்பட்டன விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
08.02.2024 மற்றும் அதனைத் தொடர்ந்த சில நாட்களில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் வாயிலாக, சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் செய்திகள் வந்தன. அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் (BDDS) குழுவினர், மேற்படி பள்ளிகளில் மோப்ப நாய்களுடன் வருகைதந்து, நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி (SOP) சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், எவ்வித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், மேற்படி மிரட்டல் மின்னஞ்சல், ஒரு புரளி என தெரியவந்தது.
பதட்டம் கொள்ளவோ, பள்ளியின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கவோ வேண்டாம் எனவும், அமைதி காக்கவும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், வருங்காலங்களில் இதுபோன்ற மிரட்டல் வரும் பட்சத்தில், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இத்தகைய சூழ்நிலைகளில், சென்னை பெருநகர காவல்துறை வழங்கியுள்ள பாதுகாப்பு செயல்முறைகள் குறித்து பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்தகைய சூழ்நிலையைக் கையாள சென்னை பெருநகர காவல்துறை தயாராக உள்ளது.
கணினிசார் குற்றப் பிரிவு/மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகளை பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு முகமைகளை அணுகி, மேற்படி மின்னஞ்சல்களின் மூலாதாரம் மூலாதாரம் குறித்த விவரங்களைக் கோரியுள்ளது. மேலும், குற்றம் புரிந்தவர்களின் அடையாளத்தை மறைக்க ஏதுவாக இருந்த சில மின்னஞ்சல் சேவைகளை மற்றும் VPN சேவைகளை முடக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூடிய விரைவில் வழக்குகளைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய விஷமச் செயல்களில் ஈடுபடுவோர் அனைவரும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர். சென்னை பெருநகர காவல்துறை, குடிமக்களின் பாதுகாப்பிற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.