ஆன்லைன் மூலம் மின்சார வாகன விநியோகஸ்தர் உரிமம் பெற்றுத் தருவதாக ரூ. 4 கோடி மோசடி செய்த நபரை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
இணையதளம் மூலம் மின்சார வாகன விநியோகஸ்தர் உரிமம் பெற்று தருவதாக கூறி 30 நபர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
முருகன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது, ”நான் இணையதளம் விளம்பரத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு OITA E-Bikes என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் எனக்கு அறிமுகமானார். மின்சார இருசக்கர வாகனம் வாங்கி, விற்பனை செய்ய உரிமம் பெறுவதற்கு அவர் ஆசை வார்த்தை காட்டியதன் பேரில் ரூ 12 லட்சம் கொடுத்தேன். இதே போல் ராஜேந்திரன் மின்சார இரு சக்கரவாகனம் தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களிடம் விற்பனை உரிமம் செய்து தருவதாக கூறி 30 நபர்களிடம் சுமார் ரூ. 4 கோடி பணம் பெற்றார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு ராஜேந்திரன் விற்பனை .உரிமம் பெற்றுத்தராமலும், காமலும் பணத்தை திரும்ப செலுத்தாமலும், ராஜேந்திரன் சைதாப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டு 2021ம் ஆண்டு முதல் தலைமறைவாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”” என தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை மோசடி ஆவண குற்றப்பிரிவு -1ல் (EDF-1), வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனையடுத்து தலைமறைவான ராஜேந்திரனை கைது செய்யும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் படி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் P.K. செந்தில்குமாரி ஆலோசனையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் நிஷா, மேற்பார்வையில் கூடுதல் துணை காவல் ஆணையாளர் முத்துவேல்பாண்டி அறிவுரையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு -1 (EDF-1), உதவி ஆணையாளர் ஜான்விக்டர் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.R.தங்கராஜூ, உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிர விசாரணை 2021 ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த தஞ்சாவூர், பாபநாசத்தைச் சேர்ந்த ராஜேந்திரனை (வயது 52) மாமல்லபுரம் அருகில் 23.04.2024-ம் தேதி கைது செய்தனர். ராஜேந்திரன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.