சென்னை நகரில் புலன் விசாரணைப்பிரிவு காவல் நிலையங்கள்: பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சென்னை நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாமை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.
சென்னை நகரில் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் முக்கிய வழக்குகளை விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க 12 காவல் மாவட்டங்களில் 12 புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் (Investigation Wing -IW) துவங்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி முகாமினை நேற்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் சட்ட வல்லுநர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்கறிஞர்கள், தடய அறிவியல்துறை நிபுணர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, வழக்கு விசாரணை தொடர்பான புதிய யுத்திகள், விசாரணை கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.
ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இந்த விசாரணைப் பிரிவு செயல்படும். இந்த பிரிவினர் நிலுவையிலுள்ள முக்கிய வழக்குகளான கொலை, ஆதாயக்கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆட்கடத்தல், வெடிபொருள் வழக்குகள், மத, சாதி ரீதியான மோதல் வழக்குகள் மற்றும் காவல் ஆணையாளர் குறிப்பிடும் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில், சென்னை நகர காவல் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், துணை ஆணையாளர்கள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.