ஆவடி காவல் ஆணையரகத்தில் குட்கா போதை பொருட்கள் ஒழிப்பு அதிரடி சோதனை

154

இன்று 28.11.2023 குட்கா மற்றும் கூல்-லிப் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகம் முழுவதும் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையில் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் 15 குழுக்களாக பிரிந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அம்பத்தூர், ஆவடி, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ், எண்ணூர், மணலி, போரூர், திருவேற்காடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் இருந்த கடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் புகையிலை பொருட்கள் குட்கா, கூல்-லிப் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 128 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 17 கடைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 17 கடைகளும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. சோதனையின் போது மொத்தம் 125 கிலோ குட்கா, கூல்-லிப் மற்றும் பிற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிகளை மீறியவர்களுக்கு ரூ.1,15,000/- அபராதம் விதிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தொடர்பான அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.