குதிரையேற்றப் போட்டி மற்றும் பயிற்சிப் பள்ளி: விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை துவங்கி வைக்கிறார்
தமிழக காவல் துறையில் முதன் முறையாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்து, முதல் சென்னை பெருநகர காவல் துறையின் குதிரையேற்ற போட்டியை (First Greater Chennai Police Equestrian Championship-2024) புதுப்பேட்டையில் துவக்கி வைக்கிறார்.
சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் திரு.வில்லியம் லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்காணிப்பாளர் வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை பயன்படுத்தப்பட்டு வந்தது.
காவல் துறைக்கு அதன் பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை பெருநகர காவல் மோட்டார் வாகனப்பிரிவு, துணை ஆணையாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் (தலைமையிடம்) தலைமையில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.
சென்னை பெருநகர காவல் குதிரைப்படையின் தலையாய பணியானது, தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்வது ஆகும். மேலும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின அணி வகுப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி, அரசு மற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் அலங்கார அணி வகுப்பு, முக்கிய பிரமுகர்களின் அலங்கார அணி வகுப்பு மற்றும் இதர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது, சென்னை பெருநகர காவல் குதிரைப்படையானது 24 குதிரைகளை கொண்டு இயங்கி வருகிறது. மேற்படி குதிரைகள், காவல் ஆளிநர்களின் கட்டுப்பாட்டில், காவல் ஆளிநர்களுடன் ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தமிழக முதல்வர் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பின் தொடர்ச்சியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக “முதலாவது சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டியை-2024” (First Greater Chennai Police Equestrian Championship-2024) 20.02.2024 முதல் 22.02.2024 வரை 3 நாட்கள் சென்னை, புதுப்பேட்டையில் நடத்துகிறது.
இன்று கமிஷனர் அலுவலகத்தில் குதிரையேற்ற போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணியும் டீ ஷர்ட், வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுக் கேோப்பைகள் சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மற்றும் திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அறிமுகப்படுத்தினர். நாளை (20.02.2024) மாலை 4 மணியளவில், புதுப்பேட்டை, குதிரைப்படை வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில், “குதிரையேற்ற பயிற்சி பள்ளியை” (Horse Riding School) திறந்து வைத்தும், “முதலாவது சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டியை-2024” (First Greater Chennai Police Equestrian Championship-2024) கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மேலும் தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் அமுதா 21.02.2024ம் .ேதேதியும், டிஜிபி சங்கர் ஜிவால் 22.02.2024 அன்றும் இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில் பரிசுகள் வழங்குகின்றனர்.
இந்தப் குதிரையேற்ற போட்டியில் 4 Dressage போட்டிகளும், 9 Jumping போட்டிகள் என மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்க ளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், காவல் துறை அணிகள் மற்றும் பொதுமக்கள் அணிகள் 46 குதிரைகளுடன் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இப்போட்டி Youth மற்றும் Open என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டு 1.TN Sports Minister Trophy (Overall Champion Team), 2.Best Rider Trophy -Open, 3.Best Rider Trophy – Youth, 4.Best Rider in Uniformed Services Trophy ஆகிய 4 கோப்பைகள் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் முதல் பரிசாக ரூ. 10,000- (தங்கப்பதக்கம்), இரண்டாம் பரிசாக ரூ.7,000- (வெள்ளிப்பதக்கம்) மற்றும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000- (வெண்கலப் பதக்கம்) ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல் உயரதிகாரிகள், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொள்கின்றனர்.