கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் அதிரடி வேட்டை: 300 கிலோ கஞ்சா, அரிவாள்களுடன் சிக்கிய கூலிப்படை ரவுடிகள்

168

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தனிப்படை போலீசார் கைது செய்து 303 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., ADDL COP, SOUTH CHENNAI.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புனித தாமஸ்மலை காவல் மாவட்ட எல்லையான மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தல் நடப்பதாக கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவின் தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து துணைக்கமிஷனர் டாக்டர் எம். சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று

(30.01.2024) மடிப்பாக்கம், கைவேலி சந்திப்பில் வாகன தணிக்கை பணியிலிருந்தனர். அப்போது, அவ்ழியே வந்த 2 கார்களில் வந்த நபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்த போது, காரில் கஞ்சா கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், காவல் குழுவினர் காரில் கஞ்சா கடத்தி வந்த செங்குன்றத்தைச் சேர்ந்த கிஷோர் (எ) கிஷோர் குமார் (எ) ரஞ்சன் கிஷோர் குமார் (வயது 30) செங்கல்பட்டு அசோக் (எ) ஒத்தக்கண் அசோக் (29), கிழக்கு தாம்பரம் உதயகுமார் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 303 கிலோ எடை கொண்ட கஞ்சா, 7 செல்போன்கள், 3 அரிவாள்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கைது செய்யப்பட்ட கிஷோர் (எ) கிஷோர் குமார் (எ) ரஞ்சன் கிஷோர் குமார் என்பவர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இவர் மீது 8 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.  மேலும்
இவர் சோழவரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். அசோக் (எ) ஒத்தக்கண் அசோக் மீது 16 குற்ற வழக்குகள் உள்ளது மேலும் இவர் செங்கல்பட்டு மாவட்ட டவுண் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். உதயகுமார் மீது 13 குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் இவர் பீர்க்கங்கரணை காவல் நிலைய
சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் இன்று (30.01.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். காரில் கஞ்சா கடத்தி வந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து 303 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த புனித தோமையர் மலை காவல் மாவட்ட தனிப்படை காவல் குழுவினர் மற்றும் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினர்.