சென்னை நகர சைபர்கிரைம் போலீசார் 2025 ஆகஸ்ட் மாதம் சைபர்கிரைம் காவல் நிலையங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு புகார்தாரர்களின் இழந்த தொகை ரூ 1,62,53,467- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

சென்னை நகரில் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலம் பல்வேறு சைபர் குற்ற நிகழ்வுகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 1930 அவசர அழைப்பு மூலமும் நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்று துரிதமாக நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய விசாரணை மூலம் பணம் இழந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் பணத்தை சைபர்காவல்துறையினர் மீட்டுத் தருகின்றனர்.

கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் மத்தியக் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் (01.08.2025 முதல் 31.08.2025 வரை) சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவான 38 புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ. 73,44,771- மீட்கப்பட்டுள்ளது.
அதே போல வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட 13 புகார் மனுக்களில் ரூ. 31,50,584, மேற்கு மண்டலத்தில் 34 புகார்களில் ரூ.11,68,772, தெற்கு மண்டலத்தில் 40 புகார்களில் ரூ. 23,81,191, கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 43 மனுக்களில் ரூ. 22,08,149மும் மீட்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மொத்தமாக 168 புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 1,62,53,467- (ரூபாய் ஒரு கோடியே அறுபத்து இரண்டு இலட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து நானூற்று அறுபத்து ஏழு மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு 2025ம் ஆண்டு 31.08.2025 வரை ரூ. 20,41,89,113- மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இழந்த பணத்தை திரும்ப பெற்ற பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள் இணைய வழி பண பரிமாற்றம் செய்யும்பொழுது மிகுந்த விழிப்புணர்வுடனும், அனுப்பும் தொடர்புகளில் உரிய நம்பகத்தன்மை அறிந்து பயன்படுத்திடவும், உரிய புகார்களுக்கு 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் சென்னை பெருநகர காவல் துறை மூலம் கேட்டு கொள்ளப்படுகிறது.