ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது: 5 செல்போன்கள் ஏராளமான சிம்கார்டுகள் பறிமுதல்: சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை
சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதை தொடர்பு கொண்டு வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தும் அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் சொல்லியுள்ளனர்.


சந்தேக நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் ரூ.1,70,53,938 பணத்தை செலுத்தியுள்ளார். அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் மோசடி பேர்வழிகள் அந்த செயலியில் காண்பித்துள்ளனர். அதன்பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முனைந்தபோது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி மேலும் பணம் கேட்டு வற்புறுத்தவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் டெல்டா-1 அணி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதனையடுத்து இந்த இந்த மோசடி தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த குணசீலன் (25), இளையகுமார் (27), ஆகிய இருவரை நேற்று (19.07.2024) சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேற்படி குற்ற செயல்களுக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், 4 ஆதார் கார்டுகள், 9 ஏடிஎம் கார்டுகள், சிம் கார்டுகள் மற்றும் வங்கி காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
எதிரிகள் இந்த மோசடியை செய்வதற்காக பல்வேறு நபர்கள் மற்றும் போலியான நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கணக்குகள் ஆரம்பித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றுள்ளது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணைக்குப்பிறகு கைது செய்பட்ட இருவரும் இன்று (20.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் ஆசைகாட்டி போலியான பங்கு வர்த்தக செயலிகள், லிங்குகள், வலைதளங்களை அனுப்பியும் பொய்யான டிமேட் கணக்குகளை துவக்கியும் பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை பெற்று மோசடி பேர் வழிகள் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.
மேலும் இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று வரும் போலியான விளம்பரங்கள், முதலீட்டு செயலிகள் மற்றும் வலைதளங்களை நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், பொது மக்கள் ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்புப மோசடி மூலமாக ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in- ல் புகார் தெரிவிக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.