சென்னை – மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவையாறு வாலிபரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்
சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவையாறைச் சேர்ந்த வாலிபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 18.06.2024 அன்று இரவு 8.45 மணியளவில், சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு ஒரு கஸ்டமர் கேர் சேட் தகவல் ஒன்று வந்தது. சென்னை- – மும்பை விமானத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது இரவு 9:45 மணிக்கு வெடிக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம், இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகளுக்கும், சென்னை நகர காவல்துறைக்கும் தெரிவித்தனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை மைய புகாரின் அடிப்படையில் 21.06.2024 அன்று சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மிரட்டல் அனுப்பப்பட்ட சேட் (Chat) மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை போலீசார் பகுப்பாய்வு செய்தனர். இந்த மிரட்டலானது தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் உள்ள ஒரு லேண்ட் லைன் எண்ணின் இணையதள இணைப்பு மூலம் அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான தனிப்படையினர் மிரட்டல் விடுத்த நபர் திருவையாறு பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (வயது 27) என கண்டறிந்தனர். அவரை திருவையாறில் வைத்து கைது செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் அனுப்ப பயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி போன், இன்டர்நெட் மோடம் மற்றும் ரூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . பிரசன்னா சென்னை பெரம்பூரில் அருகாமையில் வசித்த போது அங்கு வந்து வந்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பிரசன்னா விசாரணைக்குப் நேற்று (22.06.2024) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இது போன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தால், பொதுமக்களின் பாதுகாப்பே முதல் முன்னுரிமை என்றும், இது போன்ற போலியான அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் வந்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.