ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 87 வயது முதியவருக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. – இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினரை எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் திருக்கோளூர் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் சண்முகவேல் என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா புலன் விசாரணை செய்து கடந்த 28.07.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி சுவாமிநாதன் இன்று (04.03.2024) குற்றவாளியான சண்முகவேல் என்பவருக்கு 20 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமைகாவலர் எப்சி ஆகியோரையும் எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.