சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் 183 பள்ளிகளில் நேற்று போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் போதைப்பெருள் இல்லாத தமிழ் நாடு என்கின்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சுமார் 183 பள்ளிகளில் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் பற்றிய உறுதி மொழியுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்ஆர்எம் மேல்நிலைப்பள்ளியில் போதை பெருள் இல்லாத தமிழ் நாடு என்ற உறுதி மொழியின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் திருவள்ளுர், பொன்னேரி, வடசென்னை, வருவாய் மாவட்டத்தை சேர்ந்த 34 பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போதைப்பெருள் பற்றிய விழிப்புணர்வுக்கான கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 135 மாணவர்களுக்கு கமிஷனர் சங்கர் பரிசு அளித்து ஊக்கப்படுத்தினார். ஆவடி காவல் ஆணையரகத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 416 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவு பெற்று அழிக்கப்பட்டது.