சென்னை, எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மதுரவாயல் பகுதியில் 26 கிலோ கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (02.01.2024) காலை, எம்.ஜி.ஆர்.நகர், சூளைபள்ளம் என்ற இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நீலகிரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (02.01.2023) காலை, ஆலப்பாக்கம், கிருஷ்ணா நகர் அருகே சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 198 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 நபர்களும், விசாரணைக்குப் பின்னர் நேற்று (02.01.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.