தேனாம்பேட்டை கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

134

சென்னை, தி.நகர், தெற்கு போக் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). கடந்த 25.03.2012 அன்று ஆண்டு தி.நகர், தெற்கு போக் ரோடு, முத்து மாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 2 நபர்களை சத்தம் போட்டு அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த இரண்டு நபர்களும் சேர்ந்து கை மற்றும் பீர்பாட்டில்களால் ராஜ்குமாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து ராஜ்குமார் 3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து திருச்சி, துறையூரைச் சேர்ந்த அன்பு (எ) அன்பழகன் (31), மதுரையைச் சேர்ந்த பாலு (23) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில்நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடந்த 13.02.2024 தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் எதிரிகள் அன்பு (எ) அன்பழகன், பாலு ஆகிய இருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி எதிரிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 51 ஆயிரம்- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.