காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர்ஜிவால் எச்சரிக்கை
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம்’’ என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.