சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு 18 ஆயிரம் போலீஸ் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

193

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18.000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், கீழ்க்காணும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக 1.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், 2.குற்ற தடுப்பு முறைகள் 3.போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு, மேற்கூறிய 3 பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் கவனங்களுடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெருநகரில் புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தி.நகர்-7, வண்ணாரப்பேட்டை-3, கீழ்பாக்கம்-3 மற்றும் பூக்கடை-4 என மேற்கூறிய 4 இடங்களிலும் மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Towers) அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாகவும் 21 பைனாகுலர் (Binocular) மூலமும் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடவாமல் தடுத்து வருகின்றனர்.

தி.நகர், வண்ணாப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் மொத்தம் 5 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்கள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தி..நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்வுகளை (Live) கண்காணித்து, குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் அகன்ற LED திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரபப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்கூறிய 4 இடங்களிலும், காவல் ஆளிநர்கள் மூலம் 19 ஒலி பெருக்கிகள் (Public Address System) மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகள் மற்றும் போக்குவரத்து நெரில் ஏற்படாமல் அறிவித்துக் கொண்டும் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 17 இடங்களில் ஸ்பீக்கர்கள் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தி.நகர் மற்றும் பூக்கடை பகுதியில் தலா 2 என 4 டிரோன் கேமிராக்கள் (Drone Cameras) மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.

பழைய குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்காக Face Recognition System (FRS) என்ற செல்போன் செயலி (Mobile App) மூலம் காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில், FRS காவல் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்சப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை நான்கு சக்கரம் (Patrol Vehicles) மற்றும் இருசக்கர சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் (Motor Cycles Beats) மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் (Traffic Marshal) மூலம் சுற்றுக் காவல் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், (Shoping Malls) சென்னை பெருநகர காவல்துறையின் நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் (Mobile X-ray Baggage scanner vehicle) மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக (Scarf) கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண்காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, சென்னையில் கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.