தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்வுக்கான ஒத்திகை இன்று ராமநாதபுரம் டிஐஜி துரை தலைமையில், தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கடந்த 26.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய நாட்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டத்தில் துறை சார்ந்த ஒதுக் கீட்டில் தேர்ச்சி பெற்ற 99 பேர் மற்றும் பொது ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற 371 பேர் என மொத்தம் 470 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நாளை (07.11.2023) உடற் தகுதி தேர்வும் (Physical Measurement Test) மற்றும் நாளை மறுநாளான 08.11.2023 அன்று உடற் திறனாய்வு தேர்வும் (Physical Efficiency Test) நடைபெறவுள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்வுக்கான ஒத்திகை இன்று (06.11.2023) தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் சூப்பர் செக் அதிகாரியான ராமநாதபுரம் சரக காவல்துறை டிஐஜி எம். துரை தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியார்களுக்கு தேர்வு மைதானத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் டிஐஜி துரை அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தன்ராஜ் கணேஷ், தூத்துக்குடி உட்கோட்ட டிஎஸ்பி சத்யராஜ், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தனுசியா, தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி புருஷோத்தமன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.