கொலைக்குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு

182

சென்னை கோயம்பேட்டில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


சென்னை, கோயம்பேடு, மேட்டுக்குளம், காந்தி தெருவில் வசித்து வந்தவர் விக்னேஷ், (17). இவர் கடந்த 25.10.2018 அன்று இரவு, வீட்டினருகே மேட்டுக்குளம் காந்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (எ) அமலாபால், 25, அஜித், 27, மோகன், 29, சாரதி, 29 ஆகியோர், விக்னேஷை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக, K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்து, மேற்படி 4 குற்றவாளிகளும், கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (07.09.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் எதிரிகள் பிரகாஷ் (எ) அமலாபால், அஜித், மோகன், சாரதி ஆகிய 4 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 குற்றவாளிகளுக்கும் கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த  கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.