ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் ரூ. 6.58 கோடி மோச­டி: கேரளா பலே கில்­லா­டிகள் மூவர் கைது: சென்னை CCB சைபர்­கிரைம் போலீசார் நட­வ­டிக்­கை

51

ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் பங்­கு­வர்த்­தக போலி செயலி மூலம் ரூ. 6.58 கோடி ஏப்பம் விட்ட கேர­ளாவைச் சேர்ந்த 3 மோசடி ஆசா­மி­களை சென்னை மத்­திய குற்­றப்­­பி­ரிவு சைபர்­கிரைம் போலீ­சார் கைது செய்­த­னர்.

முகமது பர்விஸ்                             ஸ்ரீஜித் ஆர் நாயர்                          அப்துல் சாலு

சென்­னையில் வசிக்கும் ஐஎப்எஸ் அதி­காரி ஒருவர் அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயலிகளில் சேருமாறு வாட்ஸ்ஆப்பில் வந்­த செய்தியைப் பார்த்து இரண்டு வாட்ஸ்ஆப் குழுக்களில் சேர்ந்துள்ளார். மோசடி நபர்கள் அனுப்பிய இணைப்பு மூலம் ஆன்லைனில் பங்கு வர்த்தக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும் மோசடி நபர்கள் வர்த்­தக செயலி மூலம் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய சொல்லி துாண்டியுள்­ளனர். அதை நம்­பிய ஐஎப்எஸ் அதி­காரி பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்து 6 கோடியே 58 லட்சம் ரூபாயை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்­கில் டெபாசிட் செய்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் மாய­மாகி விட்­டனர். அதன் பின்­னர்தான் அது மோசடி செயலி என்­பது தெரி­ய­வந்­தது.

இது தொடர்­பாக ஐஎப்எஸ் அதி­காரி கடந்த பிப்­வரி மாதம் சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அரு­ணிடம் புகார் அளித்தார். கமிஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு சைபர் கிரைம் போலீசார் கூடுதல் கமி­ஷனர் ராதிகா மேற்­பார்­வையில் வழக்கு பதிவு விசா­ரணை நடத்­தி­னர். மோசடி செய்பவர்களின் பணப்பழக்கத்தை கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்­து கேரளா, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலபுரம் மாவட்டங்களில் வசித்த ஸ்ரீஜித் ஆர் நாயர் (47), அப்துல் சாலு (47), முகமது பர்விஸ் (44) ஆகிய நபர்­கள் இந்த ஆன்லைன் பண மோச­டியில் ஈடு­பட்­ட­வர்கள் என்­ப­து தெரி­ய­வந்­தது. சைபர்­கிரைம் இன்ஸ்­பெக்டர் பீர்­பாஷா தலை­மை­யி­லான தனிப்­ப­டை­யினர் கேரளா விரைந்து சென்று மேற்­கண்ட மூவ­ரையும் கைது செய்­தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு குற்றச் செயல்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 3 மொபைல் போன்கள் பறி­­முதல் செய்­யப்­பட்­டன. விசா­ர­ணையில் மேலும் பல அதிர்ச்­சித்­த­க­வல்கள் வெளியா­கின.

பொது­மக்­க­ளிடம் மோசடி மூலம் பெறப்­படும் பணம் ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு BINANCE வர்த்தக மொபைல் செயலி மூலம் USDT கிரிப்டோ கரண்சியாக இந்தியாவுக்கு திரும்ப வருவதை போலீசார் அடையாளம் கண்­ட­னர். இவ்வளவு நாட்களாக மோசடி செய்பவர்கள் சிக்கிக் கொள்ளாமல் பணப்புழக்கத்தை மறைக்க இவ்வாறு செய்து வந்ததும் தெரி­ய­வந்­தது. கைதான மூவரும் சென்னை சைதாப்­பேட்டை கோர்ட்டில் ஆஜர்­ப­டு­த்­தப்­பட்டு புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.