7 நாட்களில் 31 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த வாரத்தில் 31 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் 01.01.2024 முதல் 23.06.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 364 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 122 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 159 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 27 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 16 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 708 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 17.06.2024 முதல் 23.06.2024 வரையிலான 7 நாட்களில் வழிப்பறி, கஞ்சா விற்பனை, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 31 குற்றவாளிகள் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.