துணிச்சலாக வீரதீர செயல்புரிந்த தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர், 2 காவலர்களை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த 23.12025 அன்று காலை சுமார் 7:45 மணியளவில் 65 வயது பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன், ஆத்தூரில் உள்ள பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்தார். தகவல் கிடைத்ததும் ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாரியப்பன் தனது குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். நிலைமையின் அவசரத்தை உணர்ந்த காவல் ஆய்வாளர் மாரியப்பன், அபாரமான தைரியத்தை வெளிப்படுத்தி, சீருடையில் உள்ள நிலையில் கயிற்றைப் பயன்படுத்தி ஆற்றில் இறங்கினார். காவலர்கள் முனியசாமி, மற்றும் விக்னேஷ் ஆகியோர் உதவியுடன் அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் உடனடியாக ஆத்தூரில் உள்ள சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, அங்கு அவர் தற்போது நலமுடன் சீராக உள்ளார். காவல் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் அவரது குழுவினரின் துரிதமான மற்றும் வீரச் செயல்கள், பொது சேவையில் அவர்களின் அர்ப்பணிப்புக்காக பொதுமக்களால் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆத்தூர் காவல் ஆய்வாளர் மாரியப்பன், காவலர்கள் முனியசாமி மற்றும் காவலர் விக்னேஷ் ஆகியோரை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.