போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு
2023ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக, சிறுமியின் உறவினர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய 49 வயது நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று, நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (24.04.2025) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் 49 வயது எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சாட்சிகளை ஆஜர்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகளினால் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.