எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்: பொதுமக்களுடன் கேக் வெட்டிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

206

2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுடன் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

2024ம் ஆண்டு புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) என மொத்தம் 18,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று (31.12.2023) இரவு, சென்னை பெருநகர காவல் காவல் அதிகாரிகளுடன் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிகளை நேரல் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நள்ளிரவு 12.00 மணிக்கு, உழைப்பாளர் சிலை அருகே, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுடன் கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கேக் வழங்கி, அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், நேற்று (31.12.2023) சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2024ம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று (31.12.2023) சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.