சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பணி ஓய்வு பெற்ற 32 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 1 காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை), 14 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 17 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 32 காவல் அலுவலர்கள் இன்று (31.07.2023) பணி ஓய்வு பெற்றனர். இன்று (31.07.2023) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அலுவலர்களின் சுமார் 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என சந்தீப்ராய் ரத்தோர் ஓய்வு பெற்ற காவல் அலுவலகர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையாளர்கள் ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) சீனிவாசன் (நிர்வாகம்) மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.