சிறுமிகளை பாலியல் ரீதியாக சீண்டிய ஆசாமிக்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறப்பாக புலனாய்வு விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தந்த போலீசாரை எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 10 வயது மற்றும் 8 வயது சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சாத்தான்குளம் சகாயபுரம் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் ஜான்ராஜ் (57) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி புலன் விசாரணை செய்து கடந்த 27.07.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்று (22.04.2024) குற்றவாளியான ஜான்ராஜ் என்பவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி (தற்போது ஓய்வு) மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துகுமாரி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமைக் காவலர் லெட்சுமி மற்றும் பெண் காவலர் சந்திரகலா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.