ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் இணைந்து நடத்திய கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் வடகரை அருளரசன் திருமண மண்டபத்தில் இன்று 05.09.2023 ஆவடி போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்தது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்த பொது மக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு, சர்வீஸ் சாலையில் வாகனம் நிறுத்தி இடையூறு செய்வதை தவிர்தல், வடகரை, பாலவாயில் பகுதிகளில் போக்குவரத்தை சரிசெய்தல், பள்ளி நேரங்களில் (Peak Hours) கன்டெய்னர் லாரிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கிராமப்புறங்களில் சிசிடிவி கேமரா அமைத்தல், குற்றச் செயல் நடக்கும் இடங்களில் போலீஸ் பூத் அமைத்து காவலர்களை பணியமர்த்துதல், மீஞ்சூர் பகுதியில் சாலையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல்,
மார்கெட் பகுதியில் போலீஸ் பூத் அமைத்தல், ஆட்டோ செட், டிரங்க் ஸ்டேசன் போன்றவை அமைத்து தருவது தொடர்பாக கலந்தாய்வில் பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆவடி கமிஷனர் சங்கர் உறுதியளித்தார்.