சென்னை தரமணி தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பல்நோக்கு பணியாளர் தேர்வில் மோசடி செய்த 3 பேர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னை தரமணி தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்நோக்கு பணியாளர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பணியமர்வு பெற்ற 6 நபர்கள் கைதை தொடர்ந்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்த ரயில் நிலைய அதிகாரிகள் இருவர், இந்தி ஆசிரியர் உள்ளிட்ட மூவரை சென்னை மத்தியக்குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தரமணி தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR) பல்நோக்கு பணியாளர்களுக்கான (Multi Tasking Staff) 35 காலி பணியிடங்களுக்கான தேர்வு 17.09.2023 அன்று நடந்தது. இந்தத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்து சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரமேஷ் என்பவர் 25.06.2025 சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா வழி காட்டுதலின் பேரில், துணைக்கமிஷனர் கீதாஞ்சலி ஆலோசனையின் பேரில் உதவி ஆணையாளர் காயத்திரி, இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காஜல், சகுன் குமார், டிங்கு, பிரேம் சிங், அங்கித்குமார், ஜித்து யாதவ் ஆகியோர் கடந்த 04.07.2025 அன்று கைது செய்யப்பட்டனர்.
கைதான நபர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி கொடுத்த நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் சுமதி, கமல்மோகன், கோகுலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தேடி வந்தனர். விசாரணையில் டெல்லி, பீகார் மற்றும் ஹரியானா ஆகிய நகர்களில் விசாரணை நடத்தியதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் மாநில மற்றும் மத்திய அரசு பணியில் பணிபுரிந்து வருபவர்கள் என தெரிய வந்தது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சகுன் குமார் என்பவருக்கு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பீகாரை சேர்ந்த ஜெய்சங்கர் பிரசாத் (34) என்பவரை உபி மாநிலம் சென்று இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான தனிப்படையினர் இன்று கைது செய்தனர். ஜெய்சங்கர் உபி வாரணாசி அருகே சோப்பன் என்ற ரயில் நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஜுனியர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
மற்றொரு குற்றவாளி டிங்கு என்பவருக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உபியைச் சேர்ந்த அரவிந்த் குமார் (30) என்பவரை இன்ஸ்பெக்டர் கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் டில்லியில் வைத்து இன்று கைது செய்தனர். அரவிந்த் குமார் டில்லி அருகே புலன்ஸ்சார் ரயில் நிலையத்தில் தலைமை டிக்கெட் சூப்பர்வைசராக கடந்த ஒன்றை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் ஜித்து யாதவ் என்பவருக்கு தேர்வு எழுதிக் கொடுத்த உபியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் தர்மேந்தர் குமார் (வயது 32) என்பவரை இன்ஸ்பெக்டர் கமல்மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 3 நபர்களும் அந்தந்த மாவட்ட CJM நீதிமன்ற நடுவர்கள் முன்பு ஆஜர் செய்து Transit Warrant பெற்று சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மேலும் சில குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
பொதுமக்களிடம் அரசுப் பணிக்கு தேர்வு எழுத உதவுவதாக கூறி தங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்பவேண்டாம் எனவும் அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் கமிஷனர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்