காவலர் குறை தீர்ப்பு முகாம்: 328 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்க கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு

173

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் (Police Grievance Special Camp), 293 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 328 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் புதுமை பணிகளை புகுத்தி குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காகவும், மருத்துவ முகாம்கள், காவலர் குடியிருப்புகளில் குறை தீர் முகாம்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

மேலும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் துறை ரீதியான குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில், “உங்கள் துறையில் முதமைச்சர்‘‘ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 02.10.2021 மற்றும் 03.10.2021 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற காவலர் குறை தீர்க்கும் முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தம் 1,682 மனுக்கள், 2வது கட்டமாக 24.12.2021, 27.12.2021 மற்றும்28.12.2021 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற காவலர் குறை தீர்க்கும் முகாமில் 1,010 மனுக்கள் மற்றும் 3வது கட்டமாக கடந்த 22.12.2022 முதல் 24.12.2022 வரை நடைபெற்ற காவலர் குறை தீர்க்கும் முகாமில் 1,025 மனுக்கள் என மொத்தம் 3,717 மனுக்கள் பெறப்பட்டு, 3,717 மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (09.06.2023) காலை முதல் புதுப்பேட்டை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வந்த ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும், 293 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 328 மனுக்களை பெற்றார்.

பணிமாறுதல், ஊதிய முரண்பாடு களைதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், காவலர் சேம நலநிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை கோருதல் உள்ளிட்ட துறை ரீதியான 328 மனுக்களை பெற்ற காவல் ஆணையாளர் அவர்கள் இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், துறை ரீதியான குறை தீர் மனு தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சென்னை என்னை எப்போதும் வேண்டுமானாலும் சந்தித்து மனு கொடுக்கலாம் எனவும், அலுவலகத்தில் சந்திக்க எவ்வித தடையும் இல்லை என சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், காவல் ஆணையாளர் அவர்களை அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொடுத்த 830 குறை தீர் மனுக்களில், இதுவரை 634 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொடுத்த குறைதீர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 196 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்முகாமில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், இணை ஆணையாளர் (தலைமையிடம்) சாமுண்டீஸ்வரி, துணை ஆணையாளர்கள் சவுந்தராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவலர் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நாளை (10.06.2023) தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
*****