மத்திய குற்றப்பிரிவு போலீசார் 120 பேருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு

193

சென்னை நகரில் குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேற்று (07.06.2023) மாலை, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்க செய்தும், சிறப்பாக பணிபுரிந்த சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில், துணை ஆணையாளர்கள் நாகஜோதி, மீனா, ஸ்டாலின் ஆகியோர் மேற்பார்வையில், கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலகர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

மத்திய குற்றப்பிரிவு -1 (CCB-1)

மத்திய குற்றப்பிரிவு-1 (CCB-1) துணை ஆணையாளர் நாகஜோதி மேற்பார்வையில், கூடுதல் துணை ஆணையாளர் பிரபாகரன், சீட்டு மோசடி, கந்துவட்டி, போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் சரஸ்வதி ஆகியோர் நேரடி மேற்பார்வையில், இப்பிரிவின் காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ்கண்ணா, தியாகராஜு, புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் 2008 முதல் 2022ம் ஆண்டு வரையிலான போலி பாஸ்போர்ட் தொடர்பான 236 வழக்குகளை தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வழக்குகளை விரைவாக முடித்து, கைது செய்யப்பட்ட இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த குற்றவாளிகள் அவர்களது சொந்த ஊர் மற்றும் நாடுகள் செல்ல 175 வழக்குகளில் முன் அனுமதி ஆணைகள் (Sanction of Prosecution) பெற்றனர். மேலும், போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை பிடித்து, போலி பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு (Bank Fraud Investigation team) காவல் குழுவினர் போலி வங்கி நடத்தி வந்த நபரை புது தில்லியில் கைது செய்துள்ளனர். 2017ம் ஆண்டு முதல் தலைமறைவான நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்து, நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றியுள்ளனர்.
ஆகவே, மத்திய குற்றப்பிரிவு-1 (CCB-1) துணை ஆணையாளர் முதல் காவலர் வரையிலான 37 காவல் அலுவலர்கள் காவல் ஆணையாளர் அவர்களிடம் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

மத்திய குற்றப்பிரிவு -2 (CCB-2)

மத்திய குற்றப்பிரிவு -2 துணை ஆணையாளர் மீனா மேற்பார்வையில், கூடுதல் துணை ஆணையாளர் அசோகன், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு-1 (EDF-1) உதவி ஆணையாளர் ஜான் விக்டர் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ஆப்ரகாம் க்ரூஸ் துரைராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் சுமார் 60 நபர்களை மோசடி செய்த 2 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் ரூ. 2.05 கோடி மோசடி செய்த நபரை கேரளாவில் கைது செய்துள்ளனர்.

இதே போல, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு-2 (EDF-2) பிரிவு உதவி ஆணையாளர் ராஜசேகரன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பிரசீதா தீபா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த குற்றவாளி கார்த்திக் (எ) கிஷோர் சீனிவாசன் என்பவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

மேலும், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு-3 (EDF-3) உதவி ஆணையாளர் ரித்து தலைமையிலான காவல் குழுவினர் முக்கிய குற்றவாளி ராஜ்குமார் என்பவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். மத்திய குற்றப்பிரிவு-2ஐச் சேர்ந்த மோசடி புலனாய்வு பிரிவு (Forgery Investigation Wing) உதவி ஆணையாளர் சச்சிதானந்தம் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் விசா மோசடி தொடர்பான வழக்குகளில் துரித விசாரணை மேற்கொண்டு 34 வழக்குகளை முடித்துள்ளனர்.  அதன்பேரில், சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு -2, துணை ஆணையாளர் முதல் காவல் ஆளிநர்கள் வரை 28 காவல் அலுவலர்கள் காவல் ஆணையாளர் அவர்களிடம் வெகுமதி மற்றும் சான்றிதழ்களுடன் பாராட்டுக்களை பெற்றனர்.

மத்திய குற்றப்பிரிவு -3 (CCB-3)

மத்திய குற்றப்பிரிவு -3, துணை ஆணையாளர் ஸ்டாலின் மேற்பார்வையில், கூடுதல் துணை ஆணையாளர் அகஸ்டின் பால் சுதாகர், நேரடி மேற்பார்வையில், நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்புப்பிரிவு-3 (ALGSC-3) உதவி ஆணையாளர் அனந்தராமன் தலைமையில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.B.தனலஷ்மி தலைமையிலான காவல் குழுவினர் 2 வழக்குகள் பதிவு செய்து, 7 வழக்குகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு, அதில் 3 வழக்குகளில் தண்டனை பெற்று தந்தும், 1 வழக்கில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்தும் 5 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன, இவ்வழக்குகளில் தொடர்புடைய ரூ.4.45 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டது.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ராணி தலைமையிலான காவல் குழுவினர் 7 வழக்குகளை திறம்பட விசாரணை செய்து, தொடர்ந்து கண்காணித்து, 4 விசாரணையில் இருந்த வழக்குகள் உட்பட 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 3 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இவ்வழக்குகளில் தொடர்புடைய 12.5 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டது.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பொன்சித்ரா தலைமையிலான காவல் குழுவினர் 9 வழக்குகளை திறம்பட விசாரணை செய்து, தொடர்ந்து கண்காணித்து, 3 விசாரணையில் இருந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 3 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு, 1 குற்றவாளி குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்குகளில் தொடர்புடைய 12.2 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு -3, துணை ஆணையாளர் முதல் காவல் ஆளிநர்கள் வரை 16 காவல் அலுவலர்கள் காவல் ஆணையாளர் அவர்களிடம் வெகுமதி மற்றும் சான்றிதழ்களுடன் பாராட்டுக்களை பெற்றனர்.

சைபர் கிரைம் பிரிவு

மத்திய குற்றப்பிரிவின், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் ஷாஜிதா நேரடி மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் குழுவினர் சைபர் ஹேக்கத்தான் என்ற பெரும் சவாலான சைபர் கிரைம் போட்டியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகரமான முடித்தனர். மேலும், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத்குமார், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், சிறப்பாக புலனாய்வு செய்து, 3 சைபர் கிரைம் வழக்குகளில் தொடர்புடைய 9 நைஜீரியன் குற்றவாளிகளை, வெவ்வேறு மாநிலங்களில கைது செய்தனர்.

மேலும், ரவுடிகளுக்கு எதிரான குழுவின் (Anti Gangster Team) உதவி ஆணையாளர் மனோஜ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர் பூமாறன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த ஜாகிர் உசேன் என்ற குற்றவாளியை கைது செய்து, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க வழிவகை செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பல குற்றப் பின்னணி போக்கிரிகள் (Rowdy Elements) கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

சைபர் கிரைம் துணை ஆணையாளர் தலைமையின் கீழ் செயல்படும், கூடுதல் ஆணையாளர் முதல் காவல் ஆளிநர்கள் மற்றும் ரௌடிகளுக்கு எதிரான பிரிவின் உதவி ஆணையாளர் முதல் காவல் ஆளிநர்கள் வரை 25 காவல் அலுவலர்கள் காவல் ஆணையாளரிடம் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றனர்.

மேலும், விபச்சார தடுப்புப்பிரிவு உதவி ஆணையாளர் ராஜலஷ்மி நேரடி மேற்பார்வையில், ITPU-1 காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் கொண்ட காவல் குழுவினர், பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் நடத்தி வந்த பிரபல விபச்சார தரகர்களை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்குஅனுப்பியுள்ளனர். அதன்பேரில், விபச்சார தடுப்பிப்பிரிவு உதவி ஆணையாளர் முதல் காவல் ஆளிநர்கள் வரை 16 காவல் அலுவலர்கள் காவல் ஆணையாளர் அவர்களிடம் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த 3 துணை ஆணையாளர்கள், 4 கூடுதல் ஆணையாளர்கள், 8 உதவி ஆணையாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 27 உதவி ஆய்வாளர்கள், 8 சிறப்பு உதவி ஆய்வாளகள் மற்றும் 58 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 120 காவல் அலுவலர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.