தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல்: தனிப்படைக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு
தூத்துக்குடியில் சுமார் 8 கிலோ எடையுள்ள ஐஸ் எனப்படும் மெத்தபெட்டமின் போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
டிஜிபி சங்கர்ஜிவால், ஏடிஜிபி அருண் உத்தரவின் பேரில் எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில், நேற்று 21.06.2024 காலை தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் மீஹா தலைமையில் சார்பு ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவலர்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சத்யா நகர் பாலத்தின் மேல் புறத்தில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்த நிர்மல்ராஜ் மற்றும் அவரது மனைவி ஷிபானி ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது அவர்களது இருசக்கர வாகனத்தில் ஒரு அரிசி பையில் 5 சில்வர் நிற பேக்கிங் கவர் மற்றும் 3 வெள்ளை நிற பாலிதீன் கவரில் 7 கிலோ 900 கிராம் ஐஸ் எனப்படும் மெத்தபெட்டமின் என்ற அரசால் தடைசெய்யப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் அவர்களை சட்டப்படி உரிய சாட்சிகள் முன்னிலையில் கைது செய்து, மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மேற்படி மெத்தபெட்டமின் இலங்கைக்கு கடத்த இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தலில் யார், யார் சம்மந்தப்பட்டுள்ளனர், இது எங்கிருந்து வந்துள்ளது என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டதால் மேற்படி போதைப்பொருள் இலங்கைக்கு கடத்த இருந்தது தடுக்கப்பட்டுள்ளது. மேற்படி எதிரிகளை கைது செய்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாரை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.