தென்மாவட்ட வெள்ள மீட்புப் பணியில் 4 டிஐஜிக்கள் தலைமையில் 4,000 காவல்துறையினர்: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்
தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் 4 டிஐஜிக்கள் தலைமையில் 4,000 காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்தாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளதாவது:– கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததையடுத்து மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றன.
முதற்கட்டமாக அணைகளின் நீர் வெளியேற்றத்தை கண்காணிக்கவும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வெள்ள நிவாரண பணிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளை அடையாளம் காணவும், நிவாரண மையங்களை அடையாளம் காணவும் அந்தந்த மாவட்ட காவல்துறை சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன.
மேற்கண்ட ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில பேரிடர் மீட்பு குழுவில் பயிற்சிபெற்ற 50 காவலர்கள் தேவையான பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களுடன் அணி திரட்டப்பட்டு மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும், 100 பேர் அடங்கிய 4 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், 230 பேர் அடங்கிய 9 தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினரும் மேற்கண்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். அவற்றோடல்லாமல் மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த 4,000-த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 350 காவலர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முக்கியமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டுளார். அவ்வாறாக திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்டத்திலும், இராமநாதபுரம் சரக டிஐஜி துரை தூத்துக்குடி மாவட்டத்திலும், திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார் தென்காசி மாவட்டத்திலும் முகாமிட்டு மேற்படி பணிகளை கண்காணிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி மேற்படி பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நான்கு மாவட்டங்களிலும் மேற்கண்ட பணிகள் தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் கண்காணித்து வருகிறார்.