வேலை வாங்கித்தருவதாக ரூ. 62.8 லட்சம்: போலி பணி நியமன ஆணை தயார் செய்து ஏமாற்றிய 2 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
தமிழ்நாடு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறிகை நபர்களிடம் ரூ 62.8 இலட்சம் பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய 2 கேடிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த கொரட்டூரரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (55). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் டில்லிகுமார், மகேஷ் ஆகியோர் நான் உள்பட 13 நபர்களிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ 62,80,000/- பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டனர். மேலும் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து பெரிய அளவில் ஏமாற்றி அந்த நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கமலக்கண்ணன் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டில்லிகுமார் (60), கொளத்தூர் மகேஷ் (34) ஆகிய இருவரையும் நேற்று (19.03.2025) கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இது போன்று பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் சென்னை நகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை விடுத்துள்ளார்.