28 நாட்களில் 134 போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் கைது: சென்னை நகர காவல்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த 28 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மூலம் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுவரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 26.03.2024 முதல் 22.04.2024 வரையிலான 28 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 134 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 139.6 கிலோ கஞ்சா, 17 கிராம் ஹெராயின், 25 LSD ஸ்டாம்புகள், 750 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள், 1,171 வலி நிவாரண மாத்திரைகள், ரொக்கம் ரூ.1,76,125/-, 21 செல்போன்கள், 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் (NDPS) தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 1,243 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,423 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 1,220 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 22.04.2024 வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 103 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.