சென்னை, குமரன் நகரில் 117 கிலோ குட்கா பறிமுதல்

132

சென்னை, குமரன்நகர் பகுதியில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 117 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 1 செல்போன்,1 இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ரூ. 40,400 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை, குமரன்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (22.09.2023), காலை, ஜாபர்கான்பேட்டை, திருவள்ளூர் தெரு மற்றும் சுப்ரமணிய சாலை சந்திப்பு அருகே, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த ராமநாதபுரம், திருவாடனையைச் சேர்ந்த சபிக் ரஹ்மான் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 117 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், ஸ்வாகத், ரெமோ உட்பட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ரூ.40,400- பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி சஃபிக் ரஹ்மான் விசாரணைக்குப் பின்னர் நேற்று (22.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.