வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்

141

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் நேற்று (22.07.2023) நகரின் 3 முக்கிய இடங்களான ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா ரோட்டரி மற்றும் ஈகா சந்திப்பு ஆகிய இடங்களில் 100 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 50 போக்குவரத்து வார்டன்களுடன் சாலைப் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு சம்மந்தமாக சிறப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழிப்புணர்வின் வாயிலாக தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் பயன்படுத்துவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, மது போதையில் வாகனம் ஓட்டுவது தவிர்ப்பது, இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்வதை தவிர்த்தல் மற்றும் போக்குவரத்து நிறுத்தற் கோட்டினை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் (வடக்கு) சரவணன் ஸ்பென்சர் சந்திப்பில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் போக்குவரத்து வார்டன்களுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தினார். மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருடன் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் திருநங்கைகள் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.