பல் பிடுங்கிய விவகாரம்: மேலும் இரு காவலர்கள் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு

152

அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்டது தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், கூடுதலாக உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆகிய இருவரை புதிதாக வழக்கில் சேர்த்துள்ளனர். அருண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுதலாக வழக்கை பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கில் கூடுதலாக 5 பிரிவுகளை சேர்த்துள்ளனர். கொலை மிரட்டல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதம் கொண்டு தாக்குதல், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என அறிந்தும் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துதல் பொது இடத்தில் வைத்து தாக்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் என சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கின் குற்ற எண் Crime no – 04/23 ல் 323, 324, 326, 506(1) IPC 3(1)(R),3(2)(V), 3(2)(VA), SC/ST POA ACT,75JJ ACT 2015 என 9 பிரிவுகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த போகன் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த முருகேசன் ஆகியோர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஏஎஸ்பி பல்வீர்சிங் பெயர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 2 காவலர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது வழக்கு விசாரணையில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.