திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரம்: நவீன் காவல்துறையால் மிரட்டப்படவில்லை: போலீஸ் கமிஷனர் அருண் விளக்கம்
திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நவீன் காவல்துறையால் மிரட்டப்படவில்லை என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொல்லினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை, நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீசாரிடம் நவீன் கெஞ்சி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து புழல் போலீசார் சம்பவ இடம் சென்று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது, “திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரிகிறது. சிலர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளும் போது தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இதுபோல சம்பவம் பல இடங்களில் நடந்துள்ளது. மாதவரம் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில், தங்கள் நிறுவன நிதிப்பிரிவின் கருவூல மேலாளரான நவீன் பொல்லினேனி சுமார் ரூ.44 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்தார். பொதுமக்கள் குறை தீர் முகாமில் புகார் அளித்த போது அந்த புகாரை நான் தான் பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பிரிவிற்கு விசாரணைக்கு அனுப்பினேன். முதற்கட்ட விசாரணை தொடங்கிய நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நான் தான் மாதவரம் துணை ஆணையர் பாண்டியராஜனை லீவு கொடுத்தேன். ரூ.44 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அருண் தெரிவித்தார்.