ரைபிள் பிரிவில் தங்கத்தை தட்டிய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்

166

தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தங்கமும், பிஸ்டல், ரிவால்வர் பிரிவில் வெள்ளியும் வென்றார்.

தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதிச் சுற்று போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ஏடிஜிபிக்கள் மற்றும் பல காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு அளவில் பெண்களுக்காக, கடந்த மாதங்களில் தமிழகத்தில் உள்ள நான்கு காவல் மண்டலங்கள் மற்றும் தனி பிரிவுகளில் உள்ள 1797 பேர் (பெண் காவல் உயர் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை) துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு. அதில் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதி போட்டியானது கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் ஒத்திவாக்கம் கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில், கைத் துப்பாக்கி (Pistol), தானியங்கி (Carbine) துப்பாக்கி மற்றும் துப்பாக்கி (Rifle) பிரிவுகளில் நடைபெற்றது.

அதில் பெண் காவல் உயரதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். காவல் உயர் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட இரண்டு சுற்று போட்டிகளில் இருந்து முதல் 12 இடங்களைப் பிடித்த அதிகாரிகளுக்குள் சாம்பியன் போட்டி வைக்கப்பட்டது. இதில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஐஜி முதல் டிஜிபி லெவலில் நடந்த ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார். திருச்சி கமிஷனர் கார்த்திகேயன் வெள்ளியும், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் வெங்கலப்பதக்கமும் வென்றனர். மேலும் ஐஜி முதல் டிஜிபி வரை நடந்த பிஸ்டல் மற்றும் ரிவால்வர், ரைபிள் பிரிவில் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தங்கமும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெள்ளியும், டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் வெங்கலப் பதக்கங்களையும் வென்றனர்.