மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக ரூ. 31.88 லட்சம் ஏப்பம்: தலைமறைவான கேடி பெண் கைது: சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 31.88 லட்சம் மோசடி செய்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த பலே பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், கிழங்கு விளை, முழங்குழி பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி (45). கடந்த 2022-ம் ஆண்டு இவரது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தெரிந்த நபர்கள் மூலம் சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த அந்தோணிதாஸ், வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரம்யா ஆகியோர் அறிமுகமாகினர்.

மருத்துவக்கல்லூரி மற்றும் சுகாதாரத்துறையில் தங்களுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், சுகாதாரத்துறையில் அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும் அவர்கள் ரோஸ்மேரியின் மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். மேலும் அதற்கு சுமார் ரூ. 50 லட்சம் பணம் செலவாகும் என கூறிய இருவரும்

ரோஸ்மேரியை சென்னை தேனாம் பேட்டையிலுள்ள டிஎம்எஸ் அலுவலகம் வரச்சொல்லியுள்ளனர். ரோஸ்மேரியை நம்பவைத்து கடந்த 08.02.2022 முதல் 19.5.2022 வரை பல தவணைகளாக ரூ.60,50,000- பணத்தை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் பெற்றுள்ளனர். மேலும் ரோஸ்மேரியின் மகளுக்கு கல்லூரி அட்மிஷன் கிடைத்து விட்டதாக போலியான ஆர்டரையும் காண்பித்து விடுதி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி மேலும் ரூ.1,38,000- பணத்தை ரம்யா பெற்றுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு எம்பிபிஎஸ் சீட் வாங்கித்தராமல் காலதாமதம் செய்துள்ளனர்.

தலைமறைவான அந்தோணிதாஸ்
இது தொடர்பாக ரோஸ்மேரி பணத்தை திரும்பக் கேட்டு வற்புறுத்தியதால் ரூ. 29,50,000- பணத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதி பணம் ரூ. 31,88,000 மோசடி செய்து விட்டு தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து ரோஸ்மேரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ரோஸ்மேரியிடம் அந்தோணிதாஸ், ரம்யா ஆகியோர் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்தது உண்மையென தெரியவந்தது.

அதனையடுத்து இன்ஸ்பெக்டர் கமல்மோகன் தலைமையிலான தனிப்படையினர் தலைமறைவான ரம்யாவை நேற்று முன்தினம் சோழிங்கநல்லூரில் வைத்து கைது செய்தனர். தலைமறைவான அந்தோணிதாசை தேடி வருகின்றனர். விசாரணையில் ரம்யா மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் பல கோடிகள் மோசடி செய்தது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பது வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரம்யா விசாரணைக்குப்பின் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.