போக்சோ பிரிவின் கீழ் பொய் புகார் அளிப்பவர் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை
போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் புகார்தாரரின் கணவர் ME படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை புகார்தாரரின் மாமனார் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு தன் கணவரின் பேச்சை கேட்டு மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
புகார்தாரர் தனது மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்ததால் சட்டவிதிகளின் படி புகார்தாரர் மீது வழக்கு பதிவு செய்ய உரிய நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு உரிய தண்டனை, வழங்கும் உயரிய நோக்கிலும், அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1) இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்,