‘முதன்முறையே மறுப்போம், போதையைத் தவிர்ப்போம்’’ போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்ட போதை தடுப்பு குறும்படம்

144

‘‘முதன்முறையே மறுப்போம், போதையை தவிர்ப்போம்’’ என்ற கருத்தை மையமாக்கி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்ட குறும்படம் இணையத்தில் வைரலாக்கி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக தமிழக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான தாம்பரம் காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இக்குறும்படங்கள் இளைஞர்களும், மாணவர்களும் எந்தெந்த சூழ்நிலைகளில் போதை பொருட்களை பயன்படுத்த தொடங்குகிறார்கள் என்றும் அந்த பழக்கத்திற்குள் சென்று அடிமை ஆகி விடாமல் முளையிலேயே அந்த பழக்கத்தை தடுக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த மாதம் 29ம் தேதி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஒரு குறும்படம் வெளியிட்டதையடுத்து நேற்று மற்றொரு குறும்படத்தை கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டார். ‘‘முதன்முறையே மறுப்போம், போதையைத் தவிர்ப்போம், மகிழ்ச்சிப் பாதையில் நடப்போம்’’ என்ற கருத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.