பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி: தமிழகத்தில் முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் அறிமுகம்: எஸ்பி ஜோஷ் தங்கையா புது முயற்சி
தமிழக காவல்துறையில் முதன் முறையாக வாரந்தோறும் நடக்கும் குறைதீர் மனு நாள் அன்று பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி மையம் அமைத்து கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா புதிய ஏற்பாடு செய்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கரூர் மாவட்ட எஸ்பியாக ஜோஷ் தங்கையா பொறுப்பேற்றதில் இருந்து மாவட்ட காவல்துறையில் பல சீர்த்திருத்தங்கள் செய்து வருகிறார். முதற்கட்ட நடவடிக்கையாக புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி அதன் மீது கால தாமதமின்றி வழக்குப் பதிவு செய்து, எப்ஐஆரை வீடு தேடிச் சென்று தரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்தபடியாக தற்போது பொது மக்களுக்கு வாரந்தோறும் இலவச சட்ட ஆலோசனை மையம் ஒன்றும் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இயங்க உள்ளது.
எஸ்பி. K. ஜோஷ் தங்கையா
கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் மற்றும் மாவட்ட குற்றப் பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் புதன் கிழமையன்று எஸ்பி ஜோஷ் தங்கையா தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு மனு நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு வாடகை, வீட்டு உரிமையாளர் – வாடகைதாரர் பிரச்னை, வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, பெற்றோர்களிடம் சொத்துக்களை பெற்றுக்கொண்டு பின்பு அவர்களை கவனிக்காத புகார்கள் போன்று பல்வேறு உரிமையியல் சம்மந்தப்பட்ட புகார்கள் வருகின்றன.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் தேவைப்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா, கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மைய தலைவரை அணுகி இது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாளில் இலவச சட்ட உதவி அளிக்க ஒருவரை நியமிக்கும்படி கோரியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்கப்பட்டது. அதன்படி நாளை (24.09.2025) முதல் இலவச சட்ட உதவி மையத்திலிருந்து பொதுமக்களுக்கு சட்ட உதவி செய்ய வழக்கறிஞர் ஒருவரை மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளில் இலவச சட்ட உதவி மையத்திலிருந்து பொதுமக்களுக்கு சட்ட உதவி செய்ய அரசு வழக்கறிஞர் ஒருவரை கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மனு கொடுக்கவரும் பொதுமக்கள் இலவச சட்ட உதவி பெற்றுக்கொள்ளலாம் என கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.