வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்கில் இருந்து ரூ. 8 கோடியை அபகரித்த வங்கி ஊழியர்கள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி காசோலைகளில் போலி கையொப்பம் செய்து ரூ. 8 கோடிக்கு மேல் மோசடி செய்த வங்கி துணை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரது உறவினர்கள் தீனதயாளன், தினகர், பாண்டியன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இந்து சிந்த், வங்கி அண்ணாநகர் கிளையில் கணக்கு வைத்துள்ளனர். மேலும் தீனதயாளன் பெயரில் ஒரு என்ஆர்இ அக்கவுண்டும், மனைவி சித்ரா பெயரில் ஒரு என்ஆர்இ கணக்கு என மொத்தம் 3 வங்கி கணக்குகள் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி வங்கி கணக்குகளிலிருந்து 06.06.2015 முதல் 06.09.2020 வரை வாடிக்கையாளரின் அனுமதியின்றி காசோலை மற்றும் Vouchers-களில் வங்கி அலுவலர்கள் போலியாக கையொப்பம் செய்து வங்கி கணக்கிலிருந்து ரூ. 1,43,25,000-ஐ எடுத்து மோசடி செய்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீனதயாளன் உள்ளிட்ட மூவரும் தங்கள் பவர் ஏஜெண்டான உறவினர் அர்ஜுன் பாண்டியன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின்படி வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அமெரிக்காவில் வசித்து வருகின்ற தீனதயாளன் தினகர் பாண்டியன் மற்றும் சித்ரா தம்பதியின் வங்கி காசோலையில் போலியான கையொப்பம் செய்து, வங்கி அலுவர்களால் பணப்பறிமாற்றம் செய்தது உண்மை என்பது தெரியவந்தது.
மேலும் Fixed deposit வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் முன் அனுமதி பெறாமல், Fixed deposit-ஐ Break செய்தும் அவர்களின் கையொப்பங்களை வங்கி ஊழியர்களே கையொப்பமிட்டு வெளிநாட்டில் வசிக்கும் மேற்படி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளிலும், இதே போல் பல நபர்களின் வங்கி கணக்குகளிலிருந்தும் தொகையை வங்கி ஊழியர்களே மோசடி செய்து மொத்தம் ரூ. 8 கோடி வரையில் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்பேரில், IndusInd Bank, அண்ணாநகர் கிளையில் பண மோசடியில் ஈடுபட்ட வங்கி காசாளர் குலோத்துங்கன் (49), துணை மேலாளர் வேணுகோபால் (50), காசாளர் தனசேகரன் (41) ஆகிய மூவரை நேற்று (19.08.2025) மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி மோசடி செய்த நபர்களை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு, காவல் ஆளிநர்களை காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள். பொதுமக்கள் தங்கள் வங்கி பணபரிவர்த்தனை விபரங்களை அடிக்கடி கண்காணித்து விழிப்புடன் இருக்கும்படி போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.