தத்து எடுத்து வந்த குழந்தை திடீரென இறந்து போனதால் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு விட்டுச் சென்ற 6 பேர் கைது
கடந்த 14.09.2025-ம் தேதி காலை 9 மணியளவில் சூலூர் ரயில் நிலையத்திற்கும், இருகூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்டவாளத்தில் சுமார் 6 மாதம் ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்தது.
இது குறித்து போத்தனூர் ரயில் நிலைய மேலாளர் கொடுத்த அளித்த புகாரின்பேரில் போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில், தண்டவாளத்தில் இறந்து கிடந்த குழந்தைக்கு அருகில் கருப்புக்கோழி ஒன்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மஞ்சள் கலந்த மசால் பொடிகள் அங்கு தூவப்பட்டிருந்தன. இதனால் குழந்தையின் இறப்பில் போலீசாருக்கு சந்கேம் ஏற்பட்டது. ரயில்வே டிஜிபி வன்னியப் பெருமாள் உத்தரவின் பேரில் டிஐஜி பாபு, எஸ்பி ஈஸ்வரன் நேரடி கண்காணிப்பில் தீவிர விசாரணை நடந்தது.
கோவை ரயில்வே டிஎஸ்பி பாபு தலைமையில் போத்தனூர் இன்ஸ்பெக்டர் ருவாந்திகா மற்றும் உதவி ஆய்வாளர்கள் கண்ணன், தர்மராஜ், கங்காதேவி, கார்முகில், ரமேஷ் மற்றும் காவலர்கள் சகிதம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தும், சென்னை ரயில்வே சைபர் பிரிவு தலைமை காவலர் ஜான்பால் உதவியுடன் சந்தேக நபர்களை கண்காணித்தனர். அதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகம் உள்ள கோவை சிங்காநல்லூர் மரியலூயிஸ் (47), அவரது மனைவி ராதாமணி (37), கோவை நீலிக்கோணம் பாளையம் வைசாலி (44) மற்றும் அவரது மகன்கள் அக்சய் (27), பிரவீன் குமார் (29), கிருத்திகா (26) ஆகிய 6 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்
மரியலூயிஸ், ராதாமணி தம்பதிக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் குழந்தை பிறக்க வில்லை. இதனால் குழந்தையை தத்தெடுப்பதற்காக வைசாலியுடன், ராதாமணி மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ளார். வைசாலியின் தங்கை மூலம் தெரிந்த ஒரு தம்பதியினரிடம் குழந்தையை பெற்றுக் கொண்டு கடந்த 13.09.2025-ம் தேதி காலை கோயம்புத்தூர் வந்துள்ளார்கள். ஆனால் குழந்தைக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளது. இதனால் பயந்து போன அவர்கள் குழந்தையை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசி விட திட்டம்போட்டுள்ளனர்.
மரியலூயிஸ், ராதாமணி, அக்சய் குமார், பிரவீன்குமார், கிருத்திகா ஆகியோர்கள் சேர்ந்து காரில் ரயில்வே தண்டவாளப்பகுதிக்கு சென்றுள்ளனர். சூலூர் ரயில் நிலையத்திற்கும், இருகூர் இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை வைத்து விட்டு சென்றுள்ளனர். குழந்தை இறந்தது சனிக்கிழமை என்பதால் சம்பிரதாயப்படி கருப்புக்கோழியை அறுத்து, மஞ்சள் கலந்த மசால் பொடியை தூவியதாகவும் அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்தனர். அதனையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ”ஒரு வயது முதல் 6 வரையிலான குழந்தையை தத்தெடுக்கும் சட்ட நடைமுறைகளை இவர்கள் பின்பற்ற வில்லை. மேலும் குழந்தையை சட்டத்திற்கு புறம்பாக வாங்கியுள்ளனர். விற்பது குற்றம் என தெரிந்தும், இறந்த குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறைத்து தண்டவாளப் பாதையில் வைத்துள்ளனர்.
மேலும் குழந்தையின் இறப்பைப்பற்றிய தகவலை முறைப்படி தெரிவிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக மறைத்துள்ளனர். இறந்த குழந்தையின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் அவமரியாதை படுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.