மாதவரத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

111

சென்னை, மாதவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 9 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (10.07.2023) காலை, மாதவரம், ஆந்திரா பேருந்து நிலையம் அருகே கண்காணித்து, அங்கு நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த திருச்சி வடகரையைச் சேர்ந்த மோகன்ராஜ், 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (10.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.