பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் தேனீர் மற்றும் பழச்சாறு கடைகள்: கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்
சென்னை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில், புதிய சாலைகள், பாதுகாவலர் அறைகள், நிழற்கூரைகள், தேநீர் மற்றும் பழச்சாறு கடைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் புதுமை பணிகளை புகுத்தி குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக, மருத்துவ முகாம்கள், காவலர் குடியிருப்புகளில் குறை தீர் முகாம்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நலத்திட்டங்களை சங்கர்ஜிவால் செயல்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று (17.06.2023) புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட புதிய நுழைவு வாயில், புனித தோமையர்மலை கண்டோன்மென்ட் உதவியுடன் அமைக்கப்பட்ட புதிய சிமென்ட் சாலைகள், டாக்டர் காமாட்சி மருத்துவமனை உதவியுடன் ஆயுதப்படைக்காக கட்டப்பட்ட 2 நுழைவு வாயில்களில் உள்ள 2 பாதுகாவலர் அறைகள் ஆகியவற்றை கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார். மேலும், காவல் ஆளிநர்களுக்காக, தேநீர் மற்றும் பழச்சாறு கடைகளையும், அங்குள்ள காவலர் பல்பொருள் அங்காடிக்கு வருகை தரும், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க நிழற்கூரை, அங்கு அமர்வதற்கு இருக்கைகள், குடிநீர் வசதி ஆகியவற்றையும் திறந்து வைத்தார். இதனால் புனித தோமையர்மலை ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் மற்றும் புனித தோமையர்மலை காவல் குடியிருப்பில் வசிக்கும் காவல் குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், துப்பாக்கி சுடும் போட்டி, சிலம்பம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வென்ற காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, மகளிர் கைப்பந்து அணியினருக்கு, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன், துணை ஆணையாளர்கள் டாக்டர் தீபக் சிவாச், ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), சௌந்தராஜன் (ஆயூதப்படை-1), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை-2), காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.