குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கவுரவ் காந்தி (வயது 41). இவர் தனது பணிக் காலத்தில் சுமார் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவர், இரவு உணவுக்குப் பிறகு படுத்து தூங்கினார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றனர். அவர் எழுந்திருக்காததால், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிரிழந்தததாக தெரிவித்தனர். 16,000 இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.