14 ஆண்டுகளாக பிரமோஷன் இல்லாமல் ஒரே பதவியில் நீடிக்கும் 1997 பேட்ச் எஸ்ஐக்கள் – பதவி உயர்வுக்கு ஆணையிடுவாரா முதல்வர் ஸ்டாலின்
தமிழக காவல்துறையில் 1997ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்த 239 பேர் கடந்த 14 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர்களாகவே ஒரே பதவியில் இன்னும் நீடிக்கின்றனர். டிஎஸ்பி பதவி உயர்வு என்பது கானல் நீரான நிலையில் அவர்களுக்கு டிஎஸ்பி பதவி உயர்வு வழங்கி கனவை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என்று ஏங்கிய வண்ணம் உள்ளனர்.
1994 – 95ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்த 1,337 பேர்
கடந்த 1994 –- 95 ஆம் ஆண்டுகளில் தமிழக காவல்துறையில் 1,100 நேரடி எஸ்ஐ காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, ஏற்கனவே பணியிலிருந்த காவலர்கள் நீதிமன்றத்தை அணுகி டிகிரி முடித்து ஐந்து ஆண்டுகள் பணி நிறைவடைந்த காவலர்களுக்கு தகுதி அடிப்படையில் 20 சதவீதம் நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணி வழங்க உத்தரவு பெற்றனர். அவர்களில் 0 சதவீதம் கோட்டா என்ற அடிப்படையில் ஒரு 237 பேர் எஸ்ஐக்களாக சேர்க்கப்பட்டனர். ஆக மொத்தம் 94–95ம் ஆண்டில் ஆக மொத்தம் 1,337 பேர் நேரடி எஸ்ஐக்களாக தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1997 பேட்ச் எஸ்ஐக்கள் 237 பேர்
அதில் முதலில் 500 பேர்களுக்கு 1996 ஆம் ஆண்டு பயிற்சி பெற்றதற்கான அரசாணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 837 பேருக்கு அடுத்த 15 நாட்களில் பயிற்சிக்கான இடம் ஏற்பாடு செய்து அனுப்பப்படுவதாக இருந்த சூழலில் சில காரணங்களுக்காக தாமதம் ஆகிவிட்டது. 1996வது வருடம் எஸ்ஐ பேட்ச் பயிற்சி முடித்த பின்பு 20 சதவீதம் கோட்டாவினருக்கு சென்னை ஆவடி அடுத்த வீராபுரத்திலும், 350 பேருக்கு கோவை தற்காலிக காவல் பயிற்சி கல்லூரியிலும், மீதமுள்ள 237 பேருக்கு சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியிலும் 1997 ஆம் ஆண்டு பயிற்சி வழங்கப் பட்டது.
1996 பேட்ச் எஸ்ஐக்களுக்கு டிஎஸ்பி பதவி உயர்வு
இதில் 1996 ஆம் ஆண்டு பேட்ச் எஸ்ஐக்கள் அனைவரும் தற்போது டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றும், அதில் பலர் ஏடிஎஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றனர். மேலும் கோவையில் பயிற்சி பெற்ற எஸ்ஐக்கள் பாதி பேர் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், வீராபுரம் 20 சதவீதம் கோட்டாவினர் அனைவரும் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்று விட்டனர்.
14 ஆண்டுகளாக ஒரே பதவியில் இருக்கும் 239 எஸ்ஐக்கள்
மேலும், சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர்களில் 92 பேர் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்று விட்டனர். மொத்தத்தில் இதுவரை மீதமுள்ளவர்கள் 239 பேர் கடந்த 26 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வு மட்டும் பெற்று இன்ஸ்பெக்டராகவே சுமார் 14 ஆண்டுகளாகியும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அத்தனை பேரும் டிஎஸ்பி பதவி உயர்வுக்கான முன் பயிற்சியும் முடித்து சுமார் 4 மாதங்களாகியும் டிஎஸ்பி பதவி உயர்வு வரவில்லை.
முதல்வர் பரிசீலிப்பாரா: ஏக்கத்தில் 239 எஸ்ஐக்கள்
இதற்கிடையில் சுமார் 15 பேர்கள் பதவி உயர்வு பெறாமல் இறந்து விட்டனர். 2 பேர் விரக்தியில் விருப்ப ஓய்விலும், 1 நபர் 60 வயதாகி ஓய்விலும் சென்று விட்டனர். கடந்த 26 ஆண்டு பணியில் ஒரே பதவி உயர்வுடன் மன விரக்தியில் பலவித உடல் மற்றும் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் 1997ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பி பதவி உயர்வு என்பது இப்போது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு இந்த 239 எஸ்ஐக்களின் கோரிக்கை சென்றடையாதா என்பதே அவர்களது ஏக்கமாக உள்ளது. நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் இவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்ய மாட்டாரா என்று காத்திருக்கின்றனர்.